

கும்மிடிப்பூண்டி துணை வட்டாரவளர்ச்சி அலுவலராக (தணிக்கை) சகுந்தலா(52) என்பவர் பணிபுரிந்து வந்தார். சோழவரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3-ம்தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை சுகாதாரத் துறை அதிகாரிகள் முறைப்படி அடக்கம் செய்தனர்.
ஏற்கெனவே, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சுவாமிநாதன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.