

தென்காசியில் வனத் துறை விசாரணையின்போது இறந்தஅணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தென்காசி மாவட்டம், ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து. இவர்தன் நிலத்தைச் சுற்றி உரிய அனுமதி பெறாமல் மின்வேலியை அமைத்துள்ளார். ஜூலை 22-ம் தேதி இரவு இதைக் கண்டுபிடித்த கடையம் வனத் துறையினர், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததால், மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பின் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தலைமை குற்றவியல் நடுவரால்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதித் துறை நடுவர் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
உயிரிழந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பச்சூழலை கருத்தில் கொண்டு குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.