

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 50 ஆண்டுகள் கழித்து 9 கி.மீ.,க்கு ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய் கால்வாய் மீட்கப்பட்டது.
மானாமதுரை அருகே மாரநாடு பெரிய கண்மாய் மூலம் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாயை குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்க அரசு ரூ.97 லட்சம் ஒதுக்கியது.
இந்நிலையில் ‘வைகை ஆற்றில் இருந்து கண்மாய்க்கு வரும் கால்வாய் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூரும் வாரும்போதே ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்,’ என பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அமுதா தலைமையிலான அதிகாரிகள் வைகை ஆற்றில் இருந்து மாரநாடு கண்மாய் வரையிலான 9 கி.மீ.,க்கு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று கணக்கெடுத்தனர். மாரநாடு கண்மாய் பாசன சங்கத் தலைவர் சுகுமாறன், பொருளாளர் பாக்கியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
‘கணக்கெடுப்பு பணி முடிந்ததும் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,’ என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.