Published : 25 Jul 2020 07:52 PM
Last Updated : 25 Jul 2020 07:52 PM

சேலம் கம்பராய பெருமாள் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சேலம் மாவட்டம், கெங்கவள்ளி தாலுக்காவில் உள்ள கம்பராய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “சேலம் மாவட்டம், கெங்கவள்ளி தாலுக்காவில் உள்ள கம்பராய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மாவட்ட ஆட்சியர், இந்த சமய அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு மனு அளித்தேன்.

கெங்கவள்ளியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு கோயில் நிலத்தில் 1.57 ஹெக்டேர் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் மாற்றம் செய்திருப்பது மாவட்ட வருவாய் அதிகாரி நேரடி ஆய்வில் தெரியவந்தது.

2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்கக்கோரி 2017, 2018, 2020-ல் வழங்கிய புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை இல்லை.

அதனால், சம்மந்தப்பட்ட கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து 4 வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x