சென்னைக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் வீராணம் ஏரி நிரம்பியது; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

வீராணம் ஏரி: கோப்புப்படம்
வீராணம் ஏரி: கோப்புப்படம்
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறையினர் ஏரியை நிரப்பும் நோக்கோடு கடந்த 15 நாட்களாக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீரை அனுப்பி வைத்தனர். இதனால் படிப்படியாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து இன்று (ஜூலை 25) ஏரி நிரம்பி அதன் முழுக்கொள்ளளவை எட்டியது.

ஏரி நிரம்பியதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும், ஏரியை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகளுக்குப் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும், சென்னைக்குத் தங்கு தடையின்றி தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்க முடியும். இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in