Last Updated : 25 Jul, 2020 02:48 PM

 

Published : 25 Jul 2020 02:48 PM
Last Updated : 25 Jul 2020 02:48 PM

தென்காசி விவசாயி உயிரிழந்த சம்பவம்: வனத்துறை ஊழியர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை- உடலை வாங்க குடும்பத்தினர் தொடர்ந்து மறுப்பு

தென்காசி

தென்காசி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை ஊழியர்களிடம் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். உடலை வாங்க குடும்பத்தினர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65). இவரது விவசாய நிலத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், கடையம் வனத்துறையினர் கடந்த 22-ம் தேதி இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அணைக்கரை முத்துவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அணைக்கரை முத்துவின் மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அழ்வார்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிக்கும் வரை உடலை வாங்க முடியாது என்று அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால், 3-வது நாளாக அணைக்கரை முத்துவின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிவசைலம், பங்களாக்குடியிருப்பில் உள்ள கடையம் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களிடம் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் இன்று விசாரணை நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x