Published : 25 Jul 2020 08:45 AM
Last Updated : 25 Jul 2020 08:45 AM

பூண்டி ஏரி நீர் இருப்பு குறைந்ததால் சென்னை குடிநீருக்கு நீர் திறப்பு நிறுத்தம்

பூண்டி ஏரியின் நீர் இருப்பு 108 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதால், சென்னை குடிநீருக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, சென்னைக் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து கடந்த மே மாதம் 25-ம் தேதி முதல் ஆந்திர மாநில அரசு கிருஷ்ணா நீரை திறந்து வந்தது. நீர் திறப்பதை கடந்த ஜூன் மாத இறுதியில் நிறுத்தியது.

இதனால், பூண்டி ஏரியின் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 108 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.

ஆகவே, பூண்டி ஏரியிலிருந்து, சென்னைக் குடிநீருக்காக, புழல் உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்லும் வகையில் இணைப்புக் கால்வாயில் நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,587 மில்லியன் கன அடியும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,894 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருக்கிறது. இதனால், தற்போதைக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x