Published : 25 Jul 2020 08:44 AM
Last Updated : 25 Jul 2020 08:44 AM

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் செப்.7-க்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயாராக உள்ளோம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.7-க்கு பின்பு இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு தொகுதி காலியானால் அங்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் இறுதிக்குள்ளும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கரோனா, மழை காரணங்களால் தமிழகத்தின் குடியாத்தம், திருவொற்றியூர்உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் நடத்த இயலாது என்றும், சூழல் சரியான பிறகுநடத்த வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: செப். 7 வரைஇடைத்தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. செப்.7-க்குப் பிறகு எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும் நடத்த தயார் நிலையில் உள்ளோம்.

கரோனாவால் உயிரிழந்தவர்கள் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம். இல்லாவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், படிவம் 7-ஐ பூர்த்திசெய்து இறந்தவர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்குவதற்காக விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x