Published : 25 Jul 2020 08:00 AM
Last Updated : 25 Jul 2020 08:00 AM

வாகன தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசுக்கு மாதிரி பட்ஜெட்: லாரி உரிமையாளர்கள் அனுப்பினர்

டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வாகன தொழிலை பாதுகாக்கக் கோரியும், மாதிரி பட்ஜெட்டை தயாரித்து மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:

மத்திய அரசு தற்போதுள்ள ஊரடங்கில் 25-வது நாளாக டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இந்த நிலை தொடருமானால் மோட்டார் வாகனத் தொழில் முற்றிலும் அழிந்துவிடும்.

எனவே, இந்தத் தொழில் சிறப்புடன் செயல்படும் நோக்கில், அனைத்து வகை லாரி தொழிலைச் சார்ந்தவர்கள், புக்கிங் ஏஜென்ட்கள், பேருந்துகள், மினி வேன் வாகன உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, மோட்டார் வாகனத் தொழிலுக்கு நன்மை ஏற்படும் வகையில் மாதிரி பட்ஜெட்டை தயார் செய்து, மத்திய அரசின் கலாச்சாரப்படி, அல்வா கிளறி அனைவருக்கும் வழங்கி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு அல்வாவுடன் அனுப்ப உள்ளோம். டீசல் விற்பனையை ஜிஎஸ்டியில் கொண்டு வரவேண்டும், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரி விதிப்பை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், சுங்கவரி கட்டணத்தை வாகனத்தில் சரக்கு ஏற்றுபவரே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x