சட்டப்படிப்பு முடித்தவர்கள் காணொலி மூலம் வழக்கறிஞராகப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு: பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

சட்டப்படிப்பு முடித்தவர்கள் காணொலி மூலம் வழக்கறிஞராகப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு: பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 
Updated on
1 min read

சட்டப்படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்த பிறகுதான், நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட முடியும் என்கிற நிலையில், காணொலி மூலம் பார் கவுன்சிலில் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டன. கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நீதிமன்றச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக வழக்குகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்குப் பதிவு வழங்கப்படவில்லை.

பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களுக்குக் காணொலிக் காட்சி மூலம் வழக்கறிஞர்கள் பதிவு நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவர் பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று, பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ''தனி மனித விலகல் காரணமாக, சட்டம் படித்த பட்டதாரிகளை மொத்தமாக, பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய இயலாது என்பதால் காணொலிக் காட்சி மூலம் வழக்கறிஞர்கள் பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தத.

மனுதாரர் தரப்பில், “பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தால் மட்டுமே அகில இந்திய தகுதித் தேர்வில் கலந்துகொள்ள முடியும். நீதிமன்ற விசாரணையே காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படும் நிலையில், கேரளாவைப் போல தமிழகத்திலும் காணொலிக் காட்சி மூலம் வழக்கறிஞர்கள் பதிவு நடத்தினால் பல விண்ணப்பதாரர்கள் பயனடைவர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் இந்திய பார் கவுன்சிலை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு ஜூலை 27-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும், இந்திய பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in