Published : 24 Jul 2020 05:53 PM
Last Updated : 24 Jul 2020 05:53 PM

ரூ.2836 மின்சாரக் கட்டணம்: அதிர்ச்சியில் எட்டயபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியின் குடும்பம்

கோவில்பட்டி 

எட்டயபுரத்தில் மாற்றுத்திறனாளி வீட்டுக்கு ரூ.2836 மின்சாரம் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டதால், அவரது குடும்பமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எட்டயபுரம் உமறுபுலவர் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி. பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளியான இவர் மாதந்தோறும் அரசு உதவித்தொகையான ரூ.1000 பெற்று வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காளீஸ்வரி அருகே உள்ள தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 22-ம் தேதி வந்த மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது 2 மாத மின்சார பயன்பாட்டைக் கணக்கீடு செய்து, 660 யூனிட் பதிவாகி உள்ளது. அதற்கு ரூ.2,836 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே தொகைதான் மின் கட்டண பட்டியல் அட்டையில் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவச திட்டம் அமலுக்கு வந்த பின்னர் செல்வமணியின் வீட்டுக்கு 100 யூனிட்டுக்கும் குறைவாக பதிவாகி வந்ததால், இதுவரை அவர் மின்சாரம் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது.

ஆனால், திடீரென இந்த மாதம் 660 யூனிட் பதிவானதாக தெரிவித்து அதற்கான தொகையை செலுத்த கூறியதால் செல்வமணி குடும்பமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து காளீஸ்வரி கூறும்போது, நாங்கள் இதுவரை ரூ.70 அதிகபட்சமாக மின் கட்டணம் செலுத்தி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் மின்சாரம் இலவச திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் எங்கள் வீட்டுக்கு 100-க்கும் குறைவான யூனிட்டே மின் பயன்பாடு இருக்கும் என்பதால், நாங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை.

தற்போதும் எங்களது வீட்டில் மின் பயன்பாடு அதிகமில்லை. கடந்த 22-ம் தேதி மின் கணக்கீட்டுள்ளனர். அப்போது, 990 என அளவீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வரை எங்கள் வீட்டு மின் மீட்டரில் 989.1 என்றே பதிவாகி உள்ளது. 2 நாட்களாகியும் இதுவரை எங்கள் வீட்டில் 990 என்ற அளவை கூட எட்டவில்லை. இதில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது, என்றார் அவர்.

செல்வமணியின் சகோதரர் முத்தரசு கூறுகையில், ”செல்வமணி வீட்டுக்கு கடந்த ஆண்டு ஜூலையில் தான் பழைய மின் மீட்டரை மாற்றி புதிதாக டிஜிட்டல் மீட்டர் பொருத்தினார். அதில், ஆரம்ப கட்டமாக 330 யூனிட் என பதிவாகியிருந்தது.

அதன் பின்னர் கூட 100 யூனிட்டுக்கு கீழ் தான் எனது தம்பி வீட்டின் மின் பயன்பாடு இருந்ததால், அவர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரவில்லை. ஆனால், இந்த மாதம் திடீரென 660 யூனிட் ரூ.2,836 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

செல்வமணி வீட்டில் ஒரு மின் விளக்கு மட்டும் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். டி.வி. இருந்தாலும் அதன் பயன்பாடு அதிகம் கிடையாது. அதனால் தான் அவர்கள் வீட்டில் 100 யூனிட்டுக்கு கீழ் பதிவாகி வந்தது. தற்போது அதிகளவு மின் கணக்கீடப்பட்டுள்ளது, இதுகுறித்து மின்வாரியத்தில் புகார் தெரிவித்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x