கிராம மக்கள் உருவாக்கிய 'கரோனா தோட்டம்': விளைந்த காய்கறிகளை இலவசமாக வழங்கிய ஊராட்சித் தலைவர்

காரைக்குடி அருகே பெரிய கொட்டகுடியில் காய்கறிகளை இலவசமாக வழங்கும் ஊராட்சித் தலைவர் தனபால்.
காரைக்குடி அருகே பெரிய கொட்டகுடியில் காய்கறிகளை இலவசமாக வழங்கும் ஊராட்சித் தலைவர் தனபால்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஊரடங்கு காலக்கட்டத்தில் புதர் மண்டிக் கிடந்த தரிசு நிலத்தை கிராம மக்கள் உதவியுடன் காய்கறித் தோட்டமாக மாற்றி, அதில் விளைந்த காய்கறிகளை ஊராட்சித் தலைவர் இலவசமாக வழங்கி வருகிறார்.

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் பெரியகொட்டகுடி ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது கிராமமக்களுக்கு ஊராட்சித் தலைவர் தனபால் இலவசமாக காய்கறிகளை வழங்கினார்.

தொடர்ந்து விலைக்கு வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால், புதர் மண்டிக் கிடந்த 2.5 ஏக்கர் தரிசு நிலத்தை சீரமைத்து காய்கறித் தோட்டம் அமைத்தார். இதில் கத்தரி, தக்காளி, வெண்டை , கொத்தவரை, முள்ளங்கி , பூசணி , பாகற்காய், புடலைங்காய், நிலக்கடலை, கீரை வகை பயிரிட்டனர்.

மேலும் சப்போட்டா, மா, பலா உள்ளிட்ட பழ வகை மரக்கன்றுகளும் நடப்பட்டன. இப்பணிகளில் 100 நாள் திட்ட தொழிலாளர்களை ஊராட்சித் தலைவர் ஈடுபடுத்தினார்.

மேலும் அந்த நிலத்திற்குள் கால்நடைகள் செல்ல முடியாத வகையில் சுற்றி முள்வேலி அமைத்தார்.மேலும் அந்த தோட்டத்திற்கு கரோனா தோட்டம் எனப் பெயரிட்டார்.

தற்போது அதில் விளைந்துள்ள காய்கறிகள், கீரைகளை கிராமமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். ஊராட்சித் தலைவரின் இந்த முயற்சியை கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் தனபால் கூறியதாவது: ஊரடங்கால் கிராமமக்கள் வேலையின்றி சிரமப்பட்டனர். முதலில் அவர்களுக்கு காய்கறிகளை விலைக்கு வாங்கி வழங்கினோம். அதன்பிறகு தரிசாக கிடந்த நிலத்தை சுத்தப்படுத்தி காய்கறிகளுடன் பழமரக்கன்றுகளையும் நடவு செய்தோம்.

தோட்டம் அமைத்து ஒரு மாதத்திற்கு மேலானநிலையில், தற்போது வெண்டை, கத்தரி, புடலை, கொத்தவரை போன்றவை காய்த்துள்ளன. அவற்றை பறித்து கிராமமக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். கரோனா முடியும் வரை, காய்கறிகளை நிவாரணமாக வழங்க உள்ளோம், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in