Published : 24 Jul 2020 05:36 PM
Last Updated : 24 Jul 2020 05:36 PM

கரோனா நோயாளிகள் சிகிச்சை, அனுமதிப் பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?- உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

கரோனா நோயாளிகளைக் கையாள்வதில் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா? தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் ஆலந்தூரில் கரோனா உறுதிப்படுத்தப்பட்ட பெரியர் ஆதிகேசவன் என்பவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றனர்.

ஆனால், 3 நாட்களாகியும் அவரைப் பற்றிய தகவல் தெரியாத நிலையில் அவரது மகன்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் அங்கு அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன்கள் பல நாட்கள் அப்பகுதியில் தேடினர். பின்னர் அவரை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரைப் பிடித்த அவர்கள், 'தந்தை எங்கே?' எனக்கேட்டபோது, 'அவரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இறக்கிவிட்டேன். இறக்கிவிடுவதோடு என் பணி முடிந்துவிட்டது' எனக் கூறி அவர் சென்றுவிட்டார்.

மருத்துவமனையில் கேட்டபோது, 'அவர் எங்கேபோனார் என்று தெரியவில்லை' எனக் கைவிரித்துவிட்டனர். இதுகுறித்த புகார் பூக்கடை காவல் நிலையத்தில் அளித்த அவரது மகன் துளசிதாஸ், தன் தந்தையை மீட்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “காய்ச்சல் முகாமிலிருந்து ஒருவரைக் கண்டறிவது முதல் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதுடன் எங்கள் எல்லை முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில்தான் ஒரு நோயாளி இருப்பார். ஆனாலும், மாயமான ஆதிகேசவனை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை போல நாங்களும் தேடி வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ''கரோனா நோயாளிகளைக் கையாள்வதில் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா? தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?'' எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாநகராட்சி தரப்பில், “எங்களுக்கும் சுகாதாரத் துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது. பராமரிக்கப்படும் பதிவேடுகளைத் தாக்கல் செய்கிறோம். ஆதிகேசவனைப் பற்றி அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரிக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து முழுமையாக விளக்கம் அளிக்க ஒரு வார அவகாசம் வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x