

நாடு முழுவதும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய மாநில அரசு சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் தாக்கல் செய்த மனுவில்:
கரோனா ஊரடங்கு காலத்தில் நானும் என் நண்பர்களும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் மீது கூடங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொது இடத்தில் நடைபாதையில் சீட்டு விளையாடினால் தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தது. இதன் மூலம் பல்வேறு தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சீட்டு விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகின்றன.
இதில் பணம் சூறையாடப்பட்கிறது. இது குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும், அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் கெடுக்கிறது. இது சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
எனவே தமிழக அரசும், மத்திய அரம்சு இது போன்ற ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது.
மேலும் தெலுங்கானாவில் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டது. இந்திய முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.