Last Updated : 24 Jul, 2020 11:20 AM

 

Published : 24 Jul 2020 11:20 AM
Last Updated : 24 Jul 2020 11:20 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தங்கத் தேரோட்டம்: ஆண்டாள் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோயில் வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய கோயில்களில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மேலும் இக்கோவிலில் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒன்பதாம் நாள் திருவிழாவின் போது ஆண்டாள் கோயில் திருத்தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப் படுவதுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுப்பார்கள். இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மாட வீதிகள் வழியாக நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து கோயில் வளாகத்திலேயே சிறிய தங்க தேர் இழுக்க அறநிலையத் துறை அனுமதி அளித்தது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோயில் வளாகத்திலேயே இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், சந்திரபிரபா எம்எல்ஏ, சடகோப ராமானுஜ ஜீயர், தென் மண்டல ஐஜி முருகன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா‌.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x