Published : 24 Jul 2020 07:56 AM
Last Updated : 24 Jul 2020 07:56 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனஈர்ப்பு போராட்டம்

திருவண்ணாமலை அடுத்த மேப்பத்துறை கிராமத்தில் மண் பானையில் பொங்கலிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கக் கூட்டமைப்பு மற்றும்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு போராட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 100 இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த மேப்பத்துறை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது, விவசாய நிலத்தில் மண் பானையில் பொங்கலிட்டும் மடிப்பிச்சை கேட்டும் போராட்டம் நடத்தினர். சேத்துப்பட்டு அடுத்த பெலாசூர் கிராமத்தில் வழக்கறிஞர் பாசறை பாபு உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவோடு ஏந்தி முழக்கமிடப்பட்டது.

அப்போது, சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில், ‘8 வழிச்சாலைத் திட்டம் வேண்டாம்’ என தீர்மானம் கொண்டு வர ஊராட்சி மன்றத் தலைவர்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x