Published : 24 Jul 2020 07:07 AM
Last Updated : 24 Jul 2020 07:07 AM

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வினோத்குமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 8 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் 123-வது வார்டு மலேரியா நோய் தடுப்பு பிரிவில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறேன். சுகாதாரஆய்வாளர் அறிவுறுத்தலின்பேரில் கடந்த மார்ச் 28-ம்தேதி ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற நோட்டீஸை ஒட்டினேன். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நோட்டீஸை அகற்றினேன்.

மறுநாள் பணிக்கு சென்றபோது 15 நாட்கள் என்னை பணி நீக்கம் செய்துள்ளதாக சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார். ஆனால், அதற்கான எந்த உத்தரவு நகலையும் அளிக்கவில்லை.

இதுதொடர்பாக இணைஆணையரிடம் முறையிட்டபோது ‘‘பணி நீக்கம் செய்யவில்லை. எனவே, வழக்கம்போல் பணிக்கு செல்லலாம்’’ என்று கூறினார். கடந்த மே மாதம் 9-ம் தேதி பணிக்கு சென்றபோது வருகை பதிவேட்டில் கையெழுத்து போட அனுமதிக்கவில்லை. மேல் அதிகாரிகள் செய்த தவறை மறைக்க என் மீது பழி சுமத்த பார்க்கிறார்கள். எனக்கு அதே இடத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதை வழக்காகப் பதிவு செய்து, மாநில மனித உரிமைஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் விசாரணைக்கு எடுத்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x