Published : 24 Jul 2020 07:00 AM
Last Updated : 24 Jul 2020 07:00 AM

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் தமிழக உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

மத்திய அரசுடன் இணக்கமாகஇருந்தாலும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து போராடி வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை அயனாவரம் மண்டலஅலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கரோனாவில் இருந்து குணமடைந்த மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்குரூ.1,000 நிவாரண நிதியை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டிலேயே தமிழகத்தில்தான்அதிகமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனையில் 10 சதவீதம் மட்டுமே பாதிப்பு கண்டறியப்படுவதால், மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்க முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கரோனா தடுப்பு பணிகளுக்காகவும், மருத்துவ உபகரணங்கள், நிவாரணம் வழங்கவும் தேவையான நிதி கேட்டு கடிதம், காணொலிவாயிலாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசும் வழங்கும் என்று நம்புகிறோம். அதிமுக - பாஜக இடையே தற்போது சுமுக உறவு நீடித்து வருகிறது. மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்தாலும், தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் முதல்வரும், துணை முதல்வரும் போராடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x