Last Updated : 23 Jul, 2020 05:34 PM

 

Published : 23 Jul 2020 05:34 PM
Last Updated : 23 Jul 2020 05:34 PM

புதுக்கோட்டையில் 1,920 வீடுகளுடன் ரூ.150 கோடியில் கட்டி திறக்கப்படாமல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கரோனா வார்டு அமைக்க திட்டம்; ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை நரிமேட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகம்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 174 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் 1,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் புதுக்கோட்டையும் இடம்பிடித்துள்ளது.

ஆனால், புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவனையில் உள்ள கரோனா வார்டுகளில் மட்டுமே பாதிக்கப்பட்டோரை தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப படுக்கை வசதிகளையும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் இன்று (ஜூலை 23) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியதாவது:

"ராணியார் அரசு மருத்துவமனையில் 1,000 படுக்கைகளும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள், அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 12 தாலுகா அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 123 படுக்கைகளும், 13 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 195 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 121 படுக்கைகள் என மொத்தம் 1,739 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 608 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி.

முன்னேற்பாடு நடவடிக்கையாக புதுக்கோட்டை நரிமேட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,920 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 1,000 படுக்கைகளும், குடுமியான்மலை அரசு வேளாண் பண்ணையில் 150 படுக்கைகளும், கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கைகள் என மொத்தம் 1,250 படுக்கை வசதிகள் தயார் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றையும் கடந்து படுக்கைகள் தேவைப்படுமேயானால் மாவட்டத்தில் உள்ள 121 சமுதாய கூடங்களில் 1,319 படுக்கைகளும், 27 மாணவர் விடுதிகளில் 434 படுக்கைகளும், 121 திருமண மண்டபங்களில் 2,995 படுக்கைகள் என மொத்தம் 4,748 படுக்கைகள் அமைக்கப்படும். எனவே, படுக்கை வசதிகளுடன்கூடிய சிகிச்சை வசதி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், சுகாதார துணை இயக்குநர்கள் அர்ஜூன்குமார், கலைவாணி, நகராட்சி ஆணையர் ஜெ.சுப்பிரமணியன், மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக்தெய்வநாயகம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கரிஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x