Last Updated : 23 Jul, 2020 05:09 PM

 

Published : 23 Jul 2020 05:09 PM
Last Updated : 23 Jul 2020 05:09 PM

எச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸாருக்கு அவகாசம்

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018 செப்டம்பர் மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதனை விழாவில் பங்கேற்ற பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கண்டித்தார். அப்போது அவர் உயர் நீதிமன்றம் மற்றும் போலீஸாரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக திருமயம் போலீஸார் எச்.ராஜா மீது வழக்குபதிவு செய்தனர்.

உயர் நீதிமன்றம் எச்.ராஜா மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் வழக்கு முடிக்கப்பட்டது.

இந்நிலையில் திருமயம் போலீஸார் எச்.ராஜா மீது பதிவு செய்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவர் துரைசாமி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு திருமயம் போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பெரும்பகுதி விசாரணை முடிந்துவிட்டது. கரோனா பரவல் காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 மாத அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x