மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மதுபான விற்பனையை முறைப்படுத்த டாஸ்மாக் நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பது போல், மணல் விற்பனையை முறைப்படுத்த தமிழ்நாடு மணல் கழகம் (டாம்சாக்) அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் தமிழகத்தில் வைகை, காவிரி, பாலாற்றுப் படுகைகளிலும் அதிகளவில் மணல் கொள்ளை நடைபெறுகிறது.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. ஆறுகளின் நீர் போக்கு மாறி கடைமடை விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் போகிறது. எனவே தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க வேண்டும்,

அதுவரை தமிழகத்தில் உவரி, உவர், சவுடு, வண்டல், சரளை மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என முத்தரசன் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, மனு தொடர்பாகவும், சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் தமிழக அரசு ஆவணங்களுடன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஆக. 21-க்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in