Last Updated : 23 Jul, 2020 04:12 PM

 

Published : 23 Jul 2020 04:12 PM
Last Updated : 23 Jul 2020 04:12 PM

புதுச்சேரியில் புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 3 பேர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்வு

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 23) கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் இன்று 558 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 119 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 123 பேருக்கு (22 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 75 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 44 பேர் ஜிப்மரிலும், 3 பேர் காரைக்காலிலும், ஒருவர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கரோனா தொற்றுக்கு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வில்லியனூர் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் நபர் தொற்றுடன் கடந்த 20 ஆம் தேதி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், வாணரப்பேட்டையைச் சேர்ந்த 46 வயது ஆண் நபர் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 19 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவருக்கும் பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் லாஸ்பேட்டையைச் சேர்ந்த 50 வயது நபர் கடந்த 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சைப் பெற்று வந்த அவர் 21 ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது. இதனால் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மோகன்குமார்: கோப்புப்படம்

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 505 பேர், ஜிப்மரில் 259 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 133 பேர், காரைக்காலில் 52 பேர், ஏனாமில் 37 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 10 பேர், ஜிப்மரில் 2 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 5 பேர், காரைக்காலில் 4 பேர், ஏனாமில் 10 பேர் என மொத்தம் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 33 ஆயிரத்து 96 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரத்து 260 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 280 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x