பண மோசடி வழக்கு: ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஞானவேல்ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி வழக்கு: ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஞானவேல்ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பண மோசடி வழக்கில், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகத் தவறினால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாகக் கூறி துளசி மணிகண்டன் என்பவரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்குத் தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, ஜூலை 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

சம்மனுக்கு ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், ''கரோனா தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவேல்ராஜா தரப்பில், ''மோசடியில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்ட நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே ஞானவேல்ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், இந்த வழக்கில் மேலும் தகவல் தெரிய, ஞானவேல்ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த மோசடி வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் வாதம் வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக வேண்டும். ஆகஸ்ட் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகத் தவறினால் அவர் மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in