Published : 22 Jul 2020 06:38 PM
Last Updated : 22 Jul 2020 06:38 PM

ரஜினிகாந்த் இ-பாஸ் இன்றி கேளம்பாக்கம் சென்றாரா?- விசாரித்துதான் சொல்லமுடியும்: மாநகராட்சி ஆணையர் பதில் 

கரோனா தொற்றைக் கண்டறியும் பிசிஆர் சோதனை 6 லட்சத்தை நெருங்குகிறது. சென்னை மக்கள்தொகையில் 10 சதவீத மக்களை பிசிஆர் முறையில் பரிசோதனை செய்துள்ளோம் என்பதை 15 நாட்களில் கடந்துவிடுவோம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னையில் ஆய்வக உரிமையாளர்களுடன் நடத்திய சோதனைக்குப் பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி:

“5 லட்சம் ஆர்டிபிசிஆர் முறையில் பரிசோதனை செய்துள்ளோம். முன்னர் இருந்த முறையைவிட அதிகப்படுத்தி கடந்த ஊரடங்குக்கு முன்னர் 19 ஜூன் வரை 4,500 முதல் 5,000 வரை பரிசோதனை செய்துள்ளோம். தற்போது 12,000 வரை பரிசோதனை செய்துள்ளோம். மார்ச் 20 முதல் மே மாதம் வரை முதல் ஒரு லட்சம் பரிசோதனை என்பதைக் கடக்க 2 மாதம் ஆனது.

அடுத்து மேலும் 1 லட்சம் பரிசோதனைகளை அதிகரிக்க 25 நாட்கள்தான் ஆனது. அதற்கடுத்து 3 லட்சம் பரிசோதனைகளை 16 நாட்களிலும், 4 லட்சம் பரிசோதனைகளை 9 நாட்களிலும் அடைந்தோம். 5 லட்சம் பரிசோதனைகள் 9 நாட்களில் முடிந்தன. இதில் முக்கியமான விஷயம் தலைமைச் செயலர் எங்களுக்குச் சொன்ன அறிவுரை.

எத்தனை நோய்த்தொற்று வருகிறதோ அதற்குப் பத்து மடங்கு பரிசோதனை செய்யவேண்டும் என்று ஆலோசனை அளித்தார். அதன்படி பார்த்தீர்கள் என்றால் தினமும் 12,000 வரை பரிசோதனை செய்கிறோம். பொதுவாகப் பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தால், அவருடன் தொடர்புள்ளவர்களுக்கு (வீடு, அலுவலகம்) அறிகுறி இருந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்கிறோம். அதுவல்லாமல் எங்கள் களப்பணியாளர்கள் காய்ச்சல் முகாம் மூலம் வீடு வீடாக அடையாளம் கண்டு தினமும் 2,500 பேர் வரை அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனைக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து உறுதிப்படுத்துகிறோம்.

கடந்த 2,3 நாட்களாக மார்க்கெட் தொழிலாளர்களைக் கண்காணிக்கிறோம். மார்க்கெட்டுகள் எப்படி இயங்கவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளோம். அது சமூகத்தில் அவசியமான ஒன்று என்பதால் மார்க்கெட் போன்றவற்றை அனுமதிக்கிறோம். அதில் மக்களோடு சம்பந்தப்பட்டவர்களைத் தினந்தோறும் 500 பேர் வரை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம்.

தொடர்ந்து பரிசோதனை நடத்தும்போது தொற்றுக்கு ஆளானவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மூலம் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். 17-ம் தேதியே 5.05 லட்சம் பரிசோதனைகளைக் கடந்துவிட்டோம். கூடிய விரைவில் 6 லட்சத்தைக் கடந்துவிடுவோம்.

சென்னையில் சுமார் 80 லட்சம் மக்கள்தொகை என்கிற அடிப்படையில் வைத்துப் பார்த்தால் சென்னை மக்கள்தொகையில் 10 சதவீத மக்களை பிசிஆர் முறையில் பரிசோதனை செய்துள்ளோம் என்பதை 15 நாட்களில் கடந்துவிடுவோம்.

உலக அளவில் வெகு சில நகரங்கள் மட்டுமே இவ்வாறு அதிக அளவில் பரிசோதனைகள் செய்துள்ளன. இந்தியாவில் சென்னைதான் அதை அடைந்துள்ளது. விரிவான பரிசோதனை செய்வது தொடர்ச்சியாக நடைபெறும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். சமூக விலகல், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

8, 10 நாட்களுக்கு ஒருமுறை காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கி வந்தால் வெளியே செல்வது குறைந்து, நோய்ப் பரவலும் குறையும். வீட்டிலுள்ள பெரியவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை 3 மாதங்கள் தொடர்ந்து அனைவரும் கடைப்பிடித்தால் பெரிய அளவில் பரவலைத் தடுக்கலாம்.

உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைக்கும். இதுவரை 5 லட்சம் பேர் வரை விண்ணப்பித்ததில் 1.30 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்துள்ளது. ஆவணங்களை முறையாக ஆன்லைனில்தான் விண்ணப்பிக்கப் போகிறீர்கள். இதற்காக அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. முறையான ஆவணம் இருந்தால் உங்களுக்குத் தாராளமாக இ-பாஸ் கிடைக்கும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றுத்தான் செல்ல முடியும். நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் பயன்படுத்தினாரா? என்பது போன்ற குறிப்பான கேள்விகளுக்குத் தகவலை விசாரித்துதான் சொல்லமுடியும்.

1 லட்சத்து 30 பேர் இ-பாஸ் பெற்ற நிலையில் டேட்டாபேஸ் ஆய்வு செய்துதான் சொல்லமுடியும். இ-பாஸ் வாங்காமல் போயிருந்தால் அந்த மாவட்ட அளவில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். என்ன இருந்தது என்பது குறித்து நான் விசாரித்துச் சொல்கிறேன்.

சாதாரண பொதுமக்களுக்கு இரண்டு மடிப்பு முகக்கவசம், தினந்தோறும் துவைத்துப் பயன்படுத்துவது போன்ற சாதாரண காட்டன் முகக்கவசம் போதும். அதுபோன்று 50 லட்சம் முகக்கவசங்களைக் குடிசைப்பகுதிகளில் கொடுத்துள்ளோம். பொதுமக்கள் சாதாரணமான துணியாலான முகக்கவசங்களை அணிந்தாலே போதும்.

அனைத்துக் கடைகள், வியாபார நிறுவனங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் வந்தால் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளோம். தயவுசெய்து வியாபாரிகள் இதைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x