Last Updated : 22 Jul, 2020 04:11 PM

 

Published : 22 Jul 2020 04:11 PM
Last Updated : 22 Jul 2020 04:11 PM

சாத்தான்குளம் மகேந்திரன் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும்; தாய் வடிவு பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மதுரை

சாத்தான்குளம் மகேந்திரன் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என மதுரை கிளை நீதிபதி தெரிவித்தார்,

சாத்தான்குளம் காவல்துறையினர், சட்டவிரோத காவலில் வைத்து தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தாயார் வடிவின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், " 2020 கடந்த மே 18 ஆம் தேதி கொலை வழக்கொன்று தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாக கூறி உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து எனது மகன் துரை பற்றி விசாரித்தார்.

மே 23-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் எனது சகோதரி வீட்டிற்கு சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.

2 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.இதனால் அவரது தலை உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ம் தேதி இரவு பத்து முப்பது மணி அளவில் அவரை விடுவித்தனர்.

ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்ட நிலையில் வசதி இல்லாத காரணத்தால் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நீதிமன்றக் காவலில் இருக்கும் எனது மகன் துரையையும் விடுவிக்க மாட்டோம் என மிரட்டினர். அதனால் அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே எனது மகன் மகேந்திரன் உயிரிழந்தான். ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்றைய விசாரணைக்கு வந்தபோது வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களைத் தாக்கும் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தொடர்பான கடிதம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் தாயார் வடிவிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். தாயார் வடிவின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை நெல்லை DSP ஆகஸ்ட் 7ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x