Published : 22 Jul 2020 03:43 PM
Last Updated : 22 Jul 2020 03:43 PM

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல்: வாக்களிப்பது எப்படி?- அரசு விளக்கம்

சென்னை

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்டு 19 நடைபெற உள்ள நிலையில் வாக்குச் சீட்டை எப்படி பெறுவது, வாக்களிக்கும் முறை குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வக்ஃபு வாரிய தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ள செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்டு 19 அன்று நடைபெறவுள்ளது. தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய விரும்புகின்ற வாக்காளர்கள் (முத்தவல்லிகள்) வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருக்கும் இணைப்பு-ஐஐல் குறிப்பிட்டுள்ள படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களிடம் (Zonal Superintendent of Waqfs) தங்களின் அடையாளத்திற்கான சான்று பெற்று ஆகஸ்டு 08 மாலை 5.00 மணி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு (Returning Officer) அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டு வாக்காளர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட தபால் ஓட்டுகள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது தபால் மூலமாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஆகஸ்டு 19 காலை 10.00 மணிக்குள் சேரும் விதமாக அனுப்ப வேண்டும்.

தபால் ஓட்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது மண்டல வக்ஃப் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்”.

இவ்வாறு தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x