

உள்ளாட்சி அமைப்புகளின் ஊழல், முறைகேடு புகார்களை விசாரிக்கும் உள்ளாட்சி அமைப்புக்கள் முறை மன்ற நடுவம் அமைப்பின் நடுவர் பதவி காலியாக உள்ள நிலையில் 8 வாரத்தில் நியமனம் நடக்கும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளில் நடக்கும் முறைகேடுகள், லஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகள் உள்ளன. அதுபோன்று உள்ளாட்சி அமைப்புக்களில் மேயர், துணைமேயர் முதல் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குறித்த புகார்களை விசாரிக்க 2014-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புக்கள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது.
இந்த நடுவத்தின் நடுவராக முதலில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சோ.அய்யர், பதவி காலம் கடந்த மார்ச் மாதம் முடிந்தது. அதன் பின்னர் இப்பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. இப்பதவிக்கு தகுதியானவர்களை முதல்வர் பரிந்துரைக்கவேண்டும், அதை ஆளுநர் நியமனம் செய்வார்.
தற்போது நடுவர் பதவியில் யாரும் இல்லாத நிலையில், ஏராளமான முறைகேடு புகார்கள் அளிக்கப்பட்டு அவை நிலுவையில் உள்ளது என்பதால் உடனடியாக நடுவரை நியமிக்கும்படி ஆளுனரின் செயலருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுதாரர் கோரிக்கை மனுவில், “தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் ஏராளமான அளவில் நிலுவையில் இருக்கிறது. இதுவரை காலியாக உள்ள நடுவர் பதவில்லி யாருடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை.
கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே உடனடியாக நடுவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்போது கரோனா காலம் என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை. 8 வாரத்திற்குள் கூட்டம் நடத்தி உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் நியமிக்கப்படுவார்.” தெரிவித்தார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.