Published : 22 Jul 2020 02:58 PM
Last Updated : 22 Jul 2020 02:58 PM

தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க சாத்தியக்கூறு இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி

தமிழகத்தில் தற்போதைய நிலையில் திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "கயத்தாறு விமான நிலையம் 2-ம் உலகப் போரின் போது அமைக்கப்பட்ட தரமான விமான நிலையம்.

அந்த விமான நிலையத்தை இந்திய விமான படை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர். அதனை கையகப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அங்கு விரைவில் விமான தளம் வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு தாமாக முன் வந்து அறிவித்தது. அதில், எந்தவித தவறும் நடக்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின் அளவீட்டில் ஏதேனும் குளறுபடி நடந்திருந்தால், அடுத்த கணக்கீட்டில் அது சரி செய்துகொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தையும் அரசு தெரிவித்திருந்தது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக கரோனா காலத்தில் மக்களை எப்படி பாதுகாக்க வேண்டும். அதற்கு என்ன வழிமுறைகள் செய்ய வேண்டும். அரசுக்கு எப்படி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றிருந்தால், அது உண்மையான ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி.

அரசு மக்களுக்கு உத்தரவாதத்தை அளித்த பின்னரும், சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய எதிர்க்கட்சி, அதனை மீறி கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தி, மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி அரசியல் செய்கின்றனர். இது ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லை.

திரையரங்குகளைத் திறக்க தற்சமயம் சாத்தியக்கூறு இல்லை. வெளிநாட்டில் திரையங்குகள் திறக்கப்பட்டு, ஒரு வரிசைக்கு 2 பேர் அமர்ந்து படம் பார்க்கின்றனர். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபமாக இருக்காது. திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுப்பார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x