Published : 22 Jul 2020 02:52 PM
Last Updated : 22 Jul 2020 02:52 PM

அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு: ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைப்பு

சென்னை

மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது,

அப்போது பதில் மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில், அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கான எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையைக் கைவிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது.

இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அமைச்சர் மீதான வழக்கைக் கைவிட தமிழக அரசு எப்படி முடிவு எடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான தங்களுடைய புகார்கள் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு நிலுவையில் உள்ளவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அறப்போர் இயக்கம் கருத்துத் தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

இதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x