Published : 22 Jul 2020 02:08 PM
Last Updated : 22 Jul 2020 02:08 PM

ஏழு பேர் விடுதலைத் தீர்மானம் எந்த நிலையில் உள்ளது?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து பேரறிவாளன் பரோல் கோரிக்கை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் சிறையில் உள்ளனர். பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் மற்றும் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ளார்.

பேரறிவாளன் ஏற்கெனவே மருத்துவச் சிகிச்சைக்காகவும், தந்தையின் உடல்நலம் காரணமாகவும் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “நாடெங்கும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பேரறிவாளனுக்குக் கடந்த 2019 நவம்பர் மாதம் 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. சிறை விதிப்படி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் பரோல் வழங்க முடியும்” எனத் தெரிவித்தார்.

அப்போது அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தின் மீதான பரிந்துரை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. மேலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்கத் தேவையில்லை என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது” எனச் சுட்டிக்காட்டினார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள்அமர்வு, ''அரசின் பரிந்துரையை நிராகரிக்கவோ, ஏற்றுக் கொள்வதற்கோ ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், அதேவேளையில் நீண்ட நாள்கள் நிலுவையில் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புப் பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை'' எனத் தெரிவித்தது.

ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரிய வழக்கு தொடர்பாகவும் தமிழக அரசு வரும் ஜூலை 29-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, வழக்கை ஒத்திவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x