Last Updated : 22 Jul, 2020 12:07 PM

 

Published : 22 Jul 2020 12:07 PM
Last Updated : 22 Jul 2020 12:07 PM

புதுச்சேரியில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு  

புதுச்சேரியில் இன்று புதிதாக 124 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வில்லியனூரைச் சேர்ந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 22) கூறும்போது, "புதுச்சேரியில் 628 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 97 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 18 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 124 (19.7 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 60 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 32 பேர் ஜிப்மரிலும், கோவிட் கேர் சென்டரில் 5 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 18 பேர், மாஹேவில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வில்லியனூரைச் சேர்ந்த 54 வயது நபர் ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் நிலை நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த 17 ஆம் தேதி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 21) இரவு உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

மோகன்குமார்: கோப்புப்படம்

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,300 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 16 பேர், ஜிப்மரில் 17 பேர், கோவிட் கேர் சென்டரில் 18 பேர், என மொத்தம் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,369 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 32 ஆயிரத்து 468 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 29 ஆயிரத்து 675 பரிசோதனைகள் முடிவில் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 375 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x