Last Updated : 21 Jul, 2020 01:46 PM

 

Published : 21 Jul 2020 01:46 PM
Last Updated : 21 Jul 2020 01:46 PM

புதுச்சேரியில் ஒரு மருத்துவர், 3 செவிலியர்கள் உட்பட 91 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்வு  

புதுச்சேரியில் இன்று ஒரு அரசு மருத்துவர், 3 செவிலியர்கள் உட்பட 91 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 21) புதிதாக 91 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,179 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 831 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரில் 521 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 90 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 91 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 66 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 24 பேர் ஜிப்மரிலும், ஒருவர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவரும், 3 செவிலியர்களும் அடங்குவர். மேலும், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 68 வயது முதியவர் கரோனா தொற்றால் கடந்த 17 ஆம் தேதி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவர் நேற்று (ஜூலை 20) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் ஏற்கெனவே அதீத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் உயிரிழப்பு 30 ஆக உயர்ந்துள்ளது.

மோகன்குமார்: கோப்புப்படம்

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,179 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது 831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர், ஜிப்மரில் 18 பேர், கோவிட் கேர் சென்டரில் 14 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் 12 பேர் என மொத்தம் 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,318 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 31 ஆயிரத்து 947 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 29 ஆயிரத்து 495 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 134 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x