

எள், நிலக்கடலை, உளுந்து ஆகிய விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 21) வெளியிட்ட அறிக்கை:
"தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் எள் பயிரிடும் நிலப்பரப்பளவு 3 மடங்கு, அதாவது 1,450 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. விளைச்சலும் திருப்திகரமாக உள்ளது. கடந்தாண்டு எள் விலை கிலோ ரூ.120 ஆக விற்றது. ஆனால், இந்த ஆண்டு கிலோ ரூ.80-க்கு மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 1,100 ஹெக்டேரில் இருந்து 1,320 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு விலை கிலோ ரூ.63 ஆக இருந்தது இந்தாண்டு விலை கிலோ ரூ.55 ஆக குறைந்துவிட்டது.
அதேபோல், உளுந்து விற்பனை விலை கிலோவுக்கு ரூ.60-65-க்கு மட்டுமே கிடைக்கிறது. கரோனா காலத்தில் விளைபொருள்களுக்கு எதிர்பார்த்த நியாயமான விலை கிடைக்காதது, விவசாயிகளுக்கு மிகுந்து ஏமாற்றத்தையும் இழப்பையும் தருகிறது.
ஆகவே, எள், நிலக்கடலை, உளுந்து போன்ற விளைபொருள்களை நியாயமான கட்டுப்படியான விலைக்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் உழைப்புக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் இது பயனள்ளதாக இருக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.