Published : 21 Jul 2020 09:24 AM
Last Updated : 21 Jul 2020 09:24 AM

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பாலைகளை இயக்குக; தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக; அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு வைகோ கடிதம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பாலைகளை இயக்கி, தொழிலாளர்களுக்கு ஊதியம் தர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு இன்று (ஜூலை 21) வைகோ எழுதியுள்ள மின் அஞ்சல் கடிதம்:

"கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவில் நூற்பாலைத் தொழிலில், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து இயங்கி வருகின்றது. லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

1965 ஆம் ஆண்டு, ஸ்டேன்ஸ், காளீஸ்வரா உள்ளிட்ட 15 ஆலைகள் மூடப்பட்டதால், பல ஆயிரக்கணக்கhன தொழிலாளர்கள் வேலையிழந்தனர். 1967 ஆம் ஆண்டு, அண்ணா அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றதும், தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மூடப்பட்ட ஆலைகளைத் திறப்பதற்கு, பல கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கும் இடைக்கால உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆயினும், ஆலைகள் திறக்கப்படவில்லை.

எனவே, அந்த ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அண்ணாவின் மறைவுக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 1972 ஆம் ஆண்டில், மூடிக்கிடந்த பஞ்சு ஆலைகளை அரசே ஏற்று நடத்தச் சட்டம் இயற்றி, தமிழ்நாடு பஞ்சு ஆலைக் கழகம் அமைத்தார். ஆலைகள் திறக்கப்பட்டன. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.

அதைத் தொடர்ந்து, இந்தியா முழுமையும் மூடப்பட்டுக் கிடந்த 100-க்கும் மேற்பட்ட பஞ்சு ஆலைகளை, இந்திய அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றது. எனவே, 1974 ஆம் ஆண்டு, பிரதமர் இந்திரா காந்தி, தேசிய பஞ்சு ஆலைக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி, மூடிக்கிடந்த 124 பஞ்சு ஆலைகளை அரசே ஏற்று நடத்த வகை செய்தார். அதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

ஸ்மிருதி இரானி: கோப்புப்படம்

அந்த ஆலைகள் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வந்தாலும், அரசியல் பொருளாதார நிர்வாகச் சீர்கேடுகளால் நலிவுற்றன. இந்திய அளவில் தற்போது இயங்கி வருகின்ற 24 ஆலைகளுள் 7 தமிழகத்தில் உள்ளன. ஆனால் அவையும் தற்போது தள்ளாடிக் கொண்டு இருக்கின்றன. முழுமையான வேலைவாய்ப்பு இல்லை. கரோனா முடக்கத்தால் முற்றிலும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.

வேலையிழந்த தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளம் வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி, 24.03.2020 முதல் 30.04.2020 வரை, 36 நாள்களுக்கு உண்டான முழுச்சம்பளம் வழங்கினார்கள்.

அதன்பிறகு, 01.05.2020 முதல் 17.05.2020 வரை உள்ள நாட்களுக்கு முழுச்சம்பளம் வழங்குவதாக ஒப்புக்கொண்டு, இன்றைய தேதி வரை வழங்கவில்லை. அதன்பிறகு, 50 விழுக்காடு சம்பளம் வழங்குவதாக தொழிலாளர்களிடம் பேசி ஒப்புக்கொண்டனர். அதையும் வழங்கவில்லை.

இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், 19.06.2020 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 25.06.2020-க்குள் வழங்குவது என முடிவு செய்தார்கள். அதன்பிறகு, சம்பளத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே, மேற்கண்ட ஆலைகளை முழு அளவில் இயங்கச் செய்து, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஆவன செய்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்"

இவ்வாறு வைகோ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x