

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட பாரம்பரிய நடைபாதை மதுரை நேதாஜி சாலைக்கு அழகு சேர்த்துள்ளது. மாலை நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் சாலை பாதசாரிகளை ஈர்க்கிறது.
மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடங்கி நடக்கிறது.
இந்தத் திட்டத்தில் மதுரை மேற்கு நுழைவுவாயில் கோட்டைச்சுவர் முதல் நேதாஜி சாலை வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கும், அம்மன் சன்னதியில் இருந்து தேர்முட்டி வழியாக விளக்குத்தூண் வரையிலும், அம்மன் சன்னதியில் இருந்து சொக்கநாதர் கோவில் வரையிலும், திண்டுக்கல் சாலை முதல் டவுண்ஹால் ரோடு தெப்பம் வரையிலும் ரூ.12 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை அமைக்கும் பணி நடக்கிறது.
அதுபோல், அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் நான்கு சித்திரை வீதிகளில் ரூ.15.24 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
தற்போது நேதாஜி ரோட்டில் இந்த பாரம்பரிய நடைபாதை பணிகள் நிறைவுற்று அந்த சாலை பளபளக்கிறது. மக்கள் நடந்து செல்ல இந்த சாலையின் பாரம்பரிய நடைபாதை கிராணைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
சாலையின் இரு புறமும் தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் மின்னொளியில் நேதாஜி ரோடு மின்னொளியில் ஜொலிக்கிறது.
இதுபோல் மற்ற சாலைப்பணிகளும் இந்த ஊரடங்கில் வேகமாக நடப்பதால் விரைவில் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகள் உள்ளூர் பொதுமக்களையும், உலக சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும்.