Published : 20 Jul 2020 10:24 AM
Last Updated : 20 Jul 2020 10:24 AM

விவசாயிகளைப் பாதிக்கும் அவசரச் சட்டங்கள்; மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 27-ல் கறுப்புக் கொடி போராட்டம்:  மார்க்சிஸ்ட் முழு ஆதரவு

சென்னை

விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27-ம் தேதி அன்று வீடுகள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற உள்ளது. இப்போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''மத்திய பாஜக அரசு பொது முடக்கத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் திட்டங்களையும் நிர்வாக உத்தரவின் மூலமாகவும், அவசரச் சட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது. கரோனா நோய்த்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உருப்படியான நிவாரண உதவிகள் எதையும் செய்யவில்லை. மாறாக, மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. குறிப்பாக, மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா 2020 நடைமுறைக்கு வருமானால் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும், குடிசைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரச் சலுகை பறிபோகும்; மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதுடன் ஆண்டுதோறும் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்படும்.

அதேபோல், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களான உணவு தானியங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெரும் கம்பெனிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அபரிதமான விலைக்கு விற்கும் நிலை ஏற்படும். இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் பட்டினி கிடக்க நேரிடும்.

விவசாய விளை பொருட்களுக்கு அரசு விலையைத் தீர்மானித்து கொள்முதல் செய்வதற்குப் பதிலாக கார்ப்பரேட் கம்பெனிகளை நம்பி இருக்க வேண்டிய அவலநிலைக்கு விவசாயிகளை தள்ளி இருக்கிறது இந்தச் சட்டம். ஒப்பந்த சாகுபடி என்ற பெயரில் அந்நிய கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்திய விவசாயத்தை மாற்ற மத்திய அரசு இதன் மூலம் வழிவகுத்துள்ளது.

எனவே, மக்களின் வாழ்விலும் விவசாயத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மேற்படி அனைத்து சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வீடுகள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் இம்மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக பங்கேற்று வெற்றி அடையச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. பொதுமக்களின் ஆதரவைத் திரட்டும் விதமாக நடைபெறும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தையும் முழுமையாக நிறைவேற்ற பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறும் வேண்டிக் கொள்கிறோம்''.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x