Published : 20 Jul 2020 07:56 AM
Last Updated : 20 Jul 2020 07:56 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றுபெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர்மாவட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 5,800 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சியினர், அரசு மெத்தனம் காட்டுவதாக பொய்யான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். இவற்றை முறியடிக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அதிக அளவில் உருவாக்கப்பட உள்ளனர் என்றார்.

இதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்பப் பிரிவு சேர்க்கைக்கான படிவங்களை கே.சி.வீரமணிவழங்கினார். இக்கூட்டத்தில் ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குமார், நகர பொருளாளர் தன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x