Published : 20 Jul 2020 07:44 AM
Last Updated : 20 Jul 2020 07:44 AM

தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய தென் மாவட்டங்கள்

முழு ஊரடங்கால் மதுரை நெல்பேட்டை அருகே வெறிச்சோடிக் காணப்பட்ட ஏவி மேம்பாலம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை/திருநெல்வேலி

மதுரை, நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப் பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதேநேரம், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் மற்றும் வெளியிடங்க ளுக்கு மக்கள் வருவது அதிகரித்ததால் கரோனா வேகமாகப்பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அனைத்து பகுதிகளிலும் தளர்வில்லா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட் டங்களில் மருந்தகங்கள், மருத்துவ மனைகள், பால் விற்பனைக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

நெல்லை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தளர்வில்லா ஊரடங்குக்கு மக்கள் முழு ஆதரவு அளித்தனர். சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லை. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.

நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் கூறும்போது, திருநெல்வேலி மக்கள் ஒத்துழைப்புடன் முழு ஊரடங்கு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், விழிப்புணர்விலும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x