Last Updated : 19 Jul, 2020 04:49 PM

 

Published : 19 Jul 2020 04:49 PM
Last Updated : 19 Jul 2020 04:49 PM

கடுமையாக கேள்வி எழுப்பிய கிரண்பேடி; ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வை தொடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்

சுகாதாரத்துறை அலுவலகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு செய்து கடுமையாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வினை தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று (ஜூலை 18) சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகளிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார். 'பணி சரியாக செய்யாவிட்டால் ராஜிநாமா செய்து விடுங்கள்' என்றும் தெரிவித்தார். அங்கு துணை இயக்குநர் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் தங்கள் தரப்பு விவரங்களையும் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கிரண்பேடி பட்டியலிட்டார். அதில் தினமும் இரு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செய்த பணிகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் திங்களன்று ஆய்வு செய்வதற்குள் இதை செயல்படுத்த வேண்டும் என்றும் கிரண்பேடி அறிவுறுத்தியிருந்தார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: கோப்புப்படம்

அதைத்தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வை தொடங்கி அதன் விவரங்களை ஆளுநர் கிரண்பேடிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 19) அனுப்பினர். சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரகுநாதன் உள்ளிட்டோர் செய்யும் ஆய்வு விவரங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பகிர்ந்தார்.

அதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவில் திங்களன்று மாலை 4.30 மணிக்கு அடுத்தக்கட்ட தகவலை தெரிவிக்க வேண்டும். தகவல்களின் விவரங்களை மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து வாட்ஸ் அப்பில் கிரண்பேடி வெளியிட்ட தகவல்:

"பொதுமக்கள் தங்களுடைய பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும். சிறிய சிறிய கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடுவதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர வேண்டும். நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் நாம் சிறிது நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கோவிட் மீண்டும் அதிக அளவில் பரவுவதற்கு நம்முடைய கொண்டாட்டங்களே வழிவகை செய்துவிடும். நமது அண்டை மாநிலமான தமிழகம் இன்னும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x