கொடுக்கப்படும் புகார்கள் மீது 100 சதவீதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்; கரூர் மாவட்ட எஸ்.பி. பொ.பகலவன் உறுதி

கரோனா சிகிச்சைக்குப் பின்னர் பணிக்குத் திரும்பியவர்களை காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
கரோனா சிகிச்சைக்குப் பின்னர் பணிக்குத் திரும்பியவர்களை காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
Updated on
1 min read

கொடுக்கப்படும் புகார்கள் மீது 100 சதவீதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் தெரிவித்தார்.

கரூர் நகர காவல் நிலையத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் இன்று (ஜூலை 19) பணிக்குத் திரும்பிய காவல்துறையினருக்கு வரவேற்பு நிகழ்ச்சி இன்று (ஜூலை 19) நடைபெற்றது. அவர்களை காவலர்கள் அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.

காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பொன்னாடை போர்த்தி அவர்களது பணியை பாராட்டி நற்சான்றிதழ், ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினார். மேலும், கரூர் நகர காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்களுக்கு, 2 முட்டைகள், கடலை மிட்டாய், வெற்றிலையுடன் பொட்டுக்கடலை, மிளகு அடங்கிய ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினார்.

மேலும், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஊரடங்கையொட்டி கரூர் மாவட்டத்தில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மிக குறைந்தளவு வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன. மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது 100 சதவீதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படும்.

சட்டவிரோத நடவடிக்கைகளான சூதாட்டம், சாராயம், லாட்டரி ஆகியவை முற்றிலும் தடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in