Last Updated : 19 Jul, 2020 07:59 AM

 

Published : 19 Jul 2020 07:59 AM
Last Updated : 19 Jul 2020 07:59 AM

குமரி கடற்கரை கிராமங்களில் கரோனா பரவல்: மீன் பிடிக்கச் செல்வதை தவிர்த்த குளச்சல் மீனவர்கள்

கரோனா அச்சம் காரணமாக மீன்பிடிக்கச் செல்லாமல் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டுப் படகுகள்.

நாகர்கோவில்

குமரி கடற்கரை கிராமங்களில் கரோனா பரவல் காரணமாக குளச்சல் நாட்டுப் படகு மீன வர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

கேரள மாநிலம் திருவனந்த புரம் மாவட்டத்தில் பூந்துறை, புல்லு விளை முதல் அஞ்சுதெங்கு வரை கடற்கரை கிராமங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருவனந்தபுரத்தில் கடற்கரை பகுதிகள் 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அஞ்சுதெங்கு முதல் பெருந்துறை வரை முதல் மண்டலமாகவும், பெருந்துறை முதல் விழிஞ்ஞம் வரை 2-ம் மண்டலமாகவும், விழிஞ்ஞம் முதல் ஊரம்பு வரையிலான கடற்கரைப் பகுதிகள் 3-ம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு போலீஸார், சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இப்பகுதியை ஒட்டியுள்ள கன்னியாகுமரி கடற்கரை மீனவக் கிராமங்களான தூத்தூர், வள்ளவிளை, தேங்காய்பட்டணம், வாணியகுடி, குறும்பனை, இரையுமன்துறை வரையுள்ள மக்கள் ஒரு மாதத்துக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

மேலும் கேரள கடற்கரை எல்லைப் பகுதியான பூவாறு, தூத்தூரில் தொடங்கி மேற்குக் கடற்கரை கிராமமான குளச்சல் வரை 400 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கடலோரக் கிராமங்களை ஒட்டிய புதுக்கடை, கருங்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் ஏராளமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து குளச்சல் மீனவர்கள் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவல் குறைவாக இருந்தபோதே கேரள கடற்கரையை ஒட்டியுள்ள தூத்தூர், வள்ளவிளை ஆகிய மீனவக் கிராமங்களில் தான் ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தூத்தூர் பாதிரியார் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குண மாகி உள்ளனர்.

கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் பைபர் படகுகள், சிறிய ரகப் படகுகளில் கேரள கடலில் மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் கரோனா பரவல் காரணமாக நாட்டுப் படகு மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவ கிராமங்களில் தொற்று அதிகரித்தபோதிலும், வாணி யக்குடியில் வயதான மீனவர் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா கூறுகையில், கேரளாவை ஒட்டிய குமரி மீனவக் கிராமங்களில் சமூகப் பரவல் இல்லை. இப்பகுதிகளில் கரோனா தாக்கம் குறித்து வீடு வீடாக சுகாதாரத் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். தற்போது தொற்று பரவுவது குறைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x