Published : 18 Jul 2020 07:02 PM
Last Updated : 18 Jul 2020 07:02 PM

கல்லூரி வாகனங்களுக்கு சாலை வரி கேட்டு நடவடிக்கை கூடாது: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலை வரியும், அபராதமும் செலுத்தக் கூறி கோவை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகனப் போக்குவரத்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளதாகவும், சாலை வரி செலுத்தச் சென்ற கல்வி நிறுவன வாகனங்களுக்கு நூறு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, கோவை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரி நிர்வாகங்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அவர்களது மனுவில், ஊரடங்கு காலத்தில் சாலையில் இயக்கப்படாத வாகனங்களுக்கான வரி வசூலை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு காலத்தில் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற தங்களுக்கு உரிமை உள்ளது.

வரி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மிரட்டி வருவதால், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு சாலை வரி விதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.

அதேபோல, சாலை வரி செலுத்தும்படி நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு ஜூலை 22-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரர் சங்க உறுப்பினர்களிடம் வரி மற்றும் அபராதம் செலுத்தும்படி கூறி கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x