

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த விழுப்புரம் நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித், தமிழ்த் திரையுலகில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர். தனது வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் தனக்கென ஒரு இமேஜை வளர்த்துள்ளவர். நடிகர் அஜித் தற்போது நீலாங்கரை காவல் எல்லைக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது. போனை எடுத்த காவலரிடம் மறுமுனையில் பேசிய நபர், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துவிட்டு போனைத் துண்டித்து விட்டார்.
உடனடியாக இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் அளித்ததன் பேரில், நீலாங்கரை போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அஜித் வீட்டுக்கு நீலாங்கரை போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர்.
மறுபுறம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் போன் செய்த நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இவர் அடிக்கடி பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுப்பதை வழக்கமாகக் கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க விழுப்புரம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நபரைப் பிடிக்க விரைந்துள்ளனர்.
ஏற்கெனவே அஜித் வீட்டுக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று மிரட்டல் விடுத்ததும் அதே நபர்தான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அஜித் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை, மிரட்டல் போலியானது எனத் தெரியவந்தது.