திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு பிளஸ் 2 இலவச புத்தகம் வரவில்லை: மாணவர்கள் அதிருப்தி

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு பிளஸ் 2 இலவச புத்தகம் வரவில்லை: மாணவர்கள் அதிருப்தி
Updated on
1 min read

சிவகங்கை வருவாய் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு பிளஸ் 2 இலவச புத்தகம் வராததால் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த கல்வியாண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 15-ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு மணி இடைவெளியில் தலா 20 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை வருவாய் மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் மட்டுமே பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு புத்தகங்கள் வராததால், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பங்கஜம் கூறுகையில், ‘‘திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு தேவகோட்டை கல்வி மாவட்டம் மூலம் புத்தக தேவை விபரம் அனுப்பப்பட்டது.

அதில் விடுதல் ஆனதால் புத்தகங்கள் வரவில்லை.

தற்போது புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 20-ம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்படும்,’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in