Published : 18 Jul 2020 12:00 PM
Last Updated : 18 Jul 2020 12:00 PM

கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உதவித்தொகை வழங்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தமிழகக் கோயில்களில் பணியாற்றும் அனைவருக்கும் அரசின் உதவித்தொகை வழங்கக் கோரும் மனுவின் மீது இந்து சமய அறநிலையத்துறை பட்டியலை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உதவித்தொகை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, “தமிழக அரசாணையில் 8 ஆயிரத்து 340 பேர்தான் பலன் பெறுகிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர கிராமக் கோயில்களை நிர்வகிக்க கிராம பூசாரிகள் என்ற அமைப்பு உள்ளதால், அதன் மூலம் நிவாரண உதவித்தொகை 8 ஆயிரத்து 340 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் மற்றும் அர்ச்சகர் அல்லாத மற்ற ஊழியர்களுக்கும், இசைக் கலைஞர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜராகி வாதிடுகையில், “பதில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். கோயில் பணியில் ஈடுபட்ட பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கிவிட்டது. மற்றவர்கள் அரசு ரேஷன் கடை மூலம் வழங்கும் உதவித்தொகையைப் பெற்றுள்ளார்கள் என்பதால், தனியாக உதவித்தொகை வழங்கப்படவில்லை” என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் எத்தனை கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன, எத்தனை திறக்கப்படாமல் உள்ளன, இரு வகைகளிலும் எத்தனை பேர் பணியில் உள்ளார்கள் என்ற பட்டியலை இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x