Published : 21 Sep 2015 09:04 PM
Last Updated : 21 Sep 2015 09:04 PM

‛இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெற ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 285 ‛இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை இன்று தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜே.குமரகுருபரன் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 339 இடங்களில் ‛இ-சேவை’ மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில், 285 சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்குச் செல்வதற்கான முன் அனுமதி மற்றும் நேரம் ஆகியவை பெற்றுத் தரப்படும்.

புதிதாக பாஸ்போர்ட் பெற விரும்புவோர், ஏற்கனவே வைத்துள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.1,655. இதில், ரூ.1,500 மத்திய அரசுக் கட்டணம். ரூ.100 தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கான சேவைக் கட்டணம். ரூ.55 பாரத ஸ்டேட் வங்கிக்கான சேவைக் கட்டணம் ஆகும்.

இதன் மூலம், கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் அதிகளவில் பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு 9 லட்சம் பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் 4 லட்சம் பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

தற்போது பாஸ்போர்ட் பெற காவல்துறையினர் ஆய்வு செய்து வழங்க 25 நாட்கள் வரை ஆகிறது. இதை 5 நாட்கள் வரை குறைப்பதற்காக எஸ்.பி., அலுவலகத்திலேயே ஆவணங்களை பிரிண்ட் எடுத்து பரிசோதிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநில தலைமை செயலாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x