காஞ்சியில் 30 ஆயிரம் பேருக்கு வீடுவீடாக கரோனா பரிசோதனை

காஞ்சியில் 30 ஆயிரம் பேருக்கு வீடுவீடாக கரோனா பரிசோதனை
Updated on
1 min read

காஞ்சிபுரம் நகராட்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வரும் 26-ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் 30 ஆயிரம் பேருக்கு வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பரிசோதனையை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணனன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உடன் இருந்தார்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் கரோனா தொற்றால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு அதிகம் பரவுவதை தடுக்க இப்பகுதியில் 15, 16, 17, 18, 19 ஆகிய வார்டுகளில் உள்ள 21 தெருக்களில் இந்த பரிசோதனை நடைபெறுகிறது.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணியில் 10-க்கும் மேற்பட்ட நகராட்சி சுகாதாரக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in