உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்ய வழக்கு

உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்ய வழக்கு

Published on

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த தென்னரசு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

கடலூர், வேலூரில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். புத்தகத்தை பார்த்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. எனவே மார்ச் மாதம் வெளியிடப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in