Published : 17 Jul 2020 05:12 PM
Last Updated : 17 Jul 2020 05:12 PM

'வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக்கூடாது'; பொது மேலாளர் கூறியதால் தொழிற்சங்கத்தினர் போரட்டம்

வெடி மருந்து தொழிற்சாலை

உதகை

அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச வேண்டாம் என்று பொது மேலாளர் கூறியதையடுத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போரட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பொது மேலாளராக சஞ்சய் வாக்லூ என்பவர் பணியாற்றி வருகிறார.

நேற்று (ஜூலை 16) மாலை சி.எஃப்.எல்.யூ., ஐ.என்.டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் தொழிற்சாலையில் கரோனா தொற்று பரவாமல் இருக்க என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து பேச பொது மேலாளர் அறைக்கு சென்றனர்.

பின்னர் தங்களின் 20 அம்ச கோரிக்கைகள் குறித்து தமிழில் பேச ஆரம்பித்தனர். அப்போது, பொது மேலாளர், "இங்கு தமிழில் பேச கூடாது, ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுங்கள்" என்று கூறியதாக தெரிகிறது.

மேலும, பிரதிநிதிகள் தொடர்ந்து தமிழில் பேசியதையடுத்து பொது மேலாளர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்றுள்ளார்.

அதிருப்தி அடைந்த தொழிற்சங்கத்தினர் இன்று (ஜூலை 17) தொழிற்சாலை வளாகத்தில் பொது மேலாளர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி தர்ணா போராட்டம் நடத்தினர்.

'பொது மேலாளர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x