Last Updated : 17 Jul, 2020 03:41 PM

 

Published : 17 Jul 2020 03:41 PM
Last Updated : 17 Jul 2020 03:41 PM

மாமல்லபுரம் சுற்றுப்புற மக்களுக்கு இலவசமாக முகக்கவசம்; சமூக சேவையாற்றும் பிரான்ஸ் நாட்டு பெண்

மாமல்லபுரத்தில் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண், கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிராம மக்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலாவாக வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சூழலை விரும்பி பல மாதங்கள் தங்கி செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு தங்கிய வெளிநாட்டினர்களில் சிலர் உள்ளூர் மக்களின் உதவியோடு சிற்பம் மற்றும் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வது உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விரோனிக்கா (55) என்ற பெண்மணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெண்புருஷம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

மேலும், தையல் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் ஆடைகளை வெளிநாடுகள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இதன்மூலம், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்றுமதி தொழில் முடங்கியுள்ளது. இதனால், மேற்கண்ட ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.

எனினும், விரோனிக்கா தன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தி முகக்கவசம் தயாரித்து மாமல்லபுரம் மற்றும் அதைச்சுற்றியள்ள கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்து முகக்கவசங்களை தயாரித்து உள்ளூர் மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்பெண்ணின் சமூக சேவையை சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x